Wednesday 16 August 2017

பருவமழைப் பயணம் - வட்டக்கானல் (கொடைக்கானல்) பாகம் 1


இந்த வியாதி இன்று நேற்றுப் பிடித்ததல்ல. சிறு வயதிலிருந்தே இருக்கிறது. கல்லூரியில் வருடா வருடம் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ என்ற பெயரில் ஊர் சுற்றிப் பழகிவிட்டபின், பெங்களூரில் பணி நிமித்தமாகக் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா என்று சுற்றியதில் அது சற்று முற்றிவிட்டிருந்தது. இப்போது அது கைமீறிப் பயணம் என்பது வாழ்வில் நீக்கமற நிலைத்த ஒன்றாகவே ஆகிவிட்டது. 
குட்டிக்கானத்திற்குப் பருவமழைப் பயணம் சென்று வந்த இனிய அனுபவத்தில் மீண்டும் ஒரு பருவமழைப் பயணம் செல்ல முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது பயணத் திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை. குட்டிக்கானம் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு மின்சார வாரியத்தில் பணிபுரியும் நண்பர் பெருமாள் தனக்காக ஒரு பயணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் முடிவானதே இந்தப் பயணம்.


திடீர் பயணம் என்றால் நம்முடைய பிரதானத் தேர்வு கொடைக்கானல் தான். கொடைக்கானல், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தளம். கோடைக்காலத்தில் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானல் மலைக்கே மூச்சு முட்டும். வாகனங்கள் ரயிலைப் போல் வரிசையாகச் சென்று கொண்டிருக்கும். தேனீக்கள் தேன்கூட்டை மொய்ப்பது போல் தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு அவ்வளவு ஆரவாரமாக இருந்த கொடைக்கானல் ஒரு அமைதியான மலையாக மாறிவிடும். அதுமட்டுமின்றி தமிழ்நாடே காய்ந்துகொண்டிருக்க கேரளாவைப் போல் இங்கும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். ஆகவே இப்போது மீண்டும் ஒரு பருவமழைப் பயணம். 

நான், மனோ, பெருமாள்
ஒரு விடுமுறை நாளின் மதியம்…. பெரியகுளத்தில் இருந்து நமது பைக்கைக் கிளப்புகிறோம். நம்முடன், பெருமாளும், வழக்கம் போல் மனோவும் இந்தப் பயணத்தில் வருகிறார்கள். பொதுவாகக் கொடைக்கானல் செல்ல  வத்தலக்குண்டு தேனி சாலையில் உள்ள ‘கட் ரோடு’ (ghat road) சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் பயணிக்க வேண்டும். அந்தச் சாலை நல்ல அகலமானதும், நன்றாகப் பராமரிக்கப்படும் கொடைக்கானலுக்குச் செல்லும் பிரதான சாலையும் ஆகும். ஆனால் நாம் அதை விடுத்து ஒரு திரில்லுக்காக பெரியகுளத்தில் இருந்து ‘அடுக்கம்’ வழியாகச் செல்லும் சாலையைத் தேர்ந்தெடுத்தோம். இந்தச் சாலை அதற்கு நேர்மாறான தடுப்புச்சுவர்களற்ற மிகக் குறுகிய  சாலை. 



பெரியகுளத்தைவிட்டு வெளியேறி கும்பக்கரை அருவி செல்லும் சாலையில் பயணிக்கிறோம். இருபுறமும் பிரம்மாண்டமான புளியமரங்கள் குடைபிடிக்கின்றன. தொடர்ந்து செல்லும்போது காட்சிகள் மாறித் தென்னந்தோப்புகளால் சூழப்படுகிறோம். அதற்கடுத்தாற்போல் சென்றால் எங்கும் மாந்தோப்புகள் மட்டுமே. கல்லாமை, செந்தூரா, பங்கனப்பள்ளி, காளைப்பாடி என்று வகை வகையாய் மாமரங்கள். தந்தையின் தோள்களைப் பிடித்துத் தொங்கும் குழந்தையைப் போல் மரங்களில் மாங்காய்கள் சடைபிடித்துக் காய்த்துத் தொங்கின. மாங்காய்களின் கணம் தாங்காமல் கொப்புகள் தரைதட்டின. அவை ஒடிந்துவிடாமல் இருக்க நீளமான கொம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சேலத்தைப் போல் பெரியகுளமும் மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது. 
வானம் மேகங்களால் சூழப்பட்டிருந்தது. பொங்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டது போல் கொடைக்கானல் மலையே வெண்மை படர்ந்திருந்தது. மேகத்தில் இருந்து கசிந்து நீர்த்துளிகள் சாரலாய் பொழிந்து இந்தப் பருவமழைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி நம்மை உற்சாகமூட்டியது. முகத்தைக் கொடுத்து சாரலை வரவேற்று நனைந்துகொண்டே பைக்கைச் செலுத்தினோம். நம்மோடு உற்சாகமான சாரலும் சிறிது நேரத்தில் மழையெனப் பெருகிப் பொழிந்தது. பைக்கை நிறுத்தி ஒரு புளியமரத்தடியில் ஒதுங்கினோம். அரை மணி நேரம் அடித்தது மழை. மரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பசி எடுத்தது. தண்ணீர் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஒரு இன்ப அதிர்ச்சி நமக்கு. சிறிது தூரத்தில் இருந்த சில மாமரங்களில் மஞ்சள் நிறத்தில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்கின. சுற்றிலும் வேலி கூட இல்லை. நனைந்துகொண்டே அருகில் சென்று பார்த்தோம். தரையிலும் நிறையப் பழங்கள் பழுத்து விழுந்திருந்தன. விலையின்மையின் காரணமாய் காய்கள் பறிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. அந்த ஒற்றைக் காட்சி விவசாயிகளின் துன்பத்தைச் சொல்லப் போதுமானதாக இருந்தது. மாம்பழங்களைப் பறித்து உண்டு பசியாறினோம். இன்று அந்த முகம் தெரியாத விவசாயியின் துன்பத்தில் தான் எங்கள் பசியாறியது. இன்று மட்டுமல்ல நாம் தினமும் உண்ணும் உணவு தண்ணீரில் மட்டுமல்ல ஒரு விவசாயியின் கண்ணீரிலும் வளர்ந்ததே. 

நான், பெருமாள், மனோ
மழை நின்றதும் கிளம்பினோம். மழையில் நனைந்து சாலை கன்னங்கரேல் என்றிருந்தது. மரங்களும் செடிகொடிகளும் குளித்துப் பச்சைப்பசேல் என்றிருந்தன. அடிவாரத்தை அடைந்து மலைச்சாலையில் ஏறுகிறோம். சாலையைக் காடு சூழ்கிறது. ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டு வளர்ந்த மரங்கள் புதர் போல் இருக்கிறது. அதில் காட்டுக்கொடிகள் வழுக்கட்டாயமாகப் படர்ந்துகிடந்தன.


சாலையின் மறுமுகம் தெரிகிறது. இதுவரை வழவழவென்று அகலமாக  இருந்த சாலை இப்போது அகலம் குறுகி ஒற்றைப் பாதையாக மாறுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் கடப்பது சிரமம் தான். மேலே செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக சாலை மறைந்து மண் பாதையாக மாறியது. சில இடங்களில் சரலையாகவும் சில இடங்களில் சகதியாகவும்… 


சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழைத் தண்ணீரில் பேப்பர் கப்பல் விடலாம். சகதியில் பைக்கைச் செலுத்துவது சிரமமாக இருந்தது. பைக்கின் சக்கரம் சகதியில் பதிந்து எண்ணையில் கால் வைத்தது போல் வழுக்கியும் வாரியும் விட்டது. பக்கவாட்டில் தடுப்புச்சுவரும் இல்லை. சகதியின் தயவால் பைக் நேராகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது. சாலை கொடுத்த சவாலில் பல இடங்களில் மழை கொடுத்த குளிரையும் மீறி வியர்த்தது. கால்களைத் தரையில் ஊன்றி முதல் கியரிலேயே மெதுவாக நகர்த்தினோம்.


வழியெங்கும் இயற்கை கொட்டிக்கிடக்கிறது. தாவரங்கள் அனைத்தும் புதுத்தளிர் துளிர்த்து இளம்பச்சை நிறம் பூசியிருந்தன. காட்டுமலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துப் புன்முறுவல் செய்தன. மூன்று பறமும் மலைச் சிகரங்கள் உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.


ஒரு புறம் சமவெளிப் பகுதி தெரிகிறது. மலை பல மடிப்புகளைக் கொண்டு முடிவின்றிச் செல்ல நாமும் அதைத் தொடர்கிறோம். மலைசரிவுகளில் வாழையும், பலாவும் அதிகமாகப் பயிரிடப்பட்டிருக்கிறது. மலைப் பாதையில் ஒருவர் நம்மிடம் அடுக்கம் வரை லிஃப்ட் கேட்கிறார். அவரை ஏற்றி அடுக்கத்தில் இறக்கிவிட்டோம். அடுக்கம் விவசாயம் செய்யும் ஒரு சிறிய மலைக்கிராமம். மொத்தம் ஐம்பது வீடுகளுக்குள்ளாகவே இருக்கும். நாம் ஒரு சாகசப் பயணமாக இந்தச் சாலையில் வந்தோம். அந்த மக்களுக்கோ இது அன்றாடம்.

அடுக்கம் மலை கிராமம்
சகதிச் சாலையில் தொடரும் பயணம் அடர்ந்த தைல மரக் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. வீசும் காற்று தைலத்தின் நறுமணத்தை அள்ளிக் காடெங்கும் பரப்பிப் புத்துணர்ச்சியளித்தது. சிறிது நேரம் அந்த வாசனைக் காட்டில் இளைப்பாறி அந்த நறுமணத்தை அனுபவித்தோம். வரண்ட நிலங்களில் கூட செழித்து வளரக்கூடிய அவை அபரிமிதமான மழை நீரைக் குடித்து ராட்சஷ உருவில் வளர்ந்திருந்தன. 



தைலக் காட்டைக் கடந்து பெருமாள்மலை என்ற இடத்தில் கொடைக்கானலின் பிரதான சாலையை அடைகிறோம்.  இதுவரை 30 கிமீயைக் கடக்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. மேகமலைப் பயணத்திற்குப் பின் ஒரு அருமையான சாகசப் பயணம். அட்ரினல் சுரப்பை அதிகரித்த பயணம் இது. சாகச விரும்பிகளுக்கு ஏற்ற சாலை. உடல் கலைத்திருந்தாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருந்தது. இங்கிருந்து பன்னிரண்டு கிமீ சென்றால் கொடைக்கானலை அடையலாம். கலைப்பு நீங்கப் பெருமாள் மலையில் ஒரு தேனீர் விடுதியில் இளைப்பாறினோம். மழை விட்டுத் தாழ்வாரங்களில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பூமி குளிர்ந்திருந்தது. நாமும் தான்..
கடைக்கார அக்கா, ஒரு தட்டில் இரண்டு மிளகாய் பஜ்ஜியைப் பிய்த்துப் போட்டு, பஜ்ஜிகள் மூழ்கும் அளவுக்கு சூடான குருமாவும் ஊற்றிக் கொடுத்தார். ஒரு விள்ளலை எடுத்து முடிந்த அளவு குருமவையும் அள்ளி சுவைத்தபோது அந்தச் சுவை அந்தக் குளிருக்கு அமிர்தத்தினும் மேலாக இருந்தது. இதை எழுதும்போதும் நாவில் நீர் ஊறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் ஒரு கோப்பைத் தேனீரையும் அருந்திவிட்டு கொடைக்கானலை அடைந்தோம்.
நம்மோடு சேர்ந்து இரவும் தன் வரவைக் கொடுத்தது. ஜியோன் பள்ளி அருகில் உள்ள கோகுலம் காட்டேஜ். நாம் எப்போதும் தங்கும் விடுதி. நகரத்திற்குள் ஒரு அமைதியான இடம். விடுதி பொறுப்பாளர் நம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து நலம் விசாரித்தார். அறைக்குச் சென்று சிறிது நேரம் அயர்ந்தோம்.


இன்று திட்டங்கள் எதுவும் இல்லை. இரவு உணவை எதிரே உள்ள உணவு விடுதியில் பெற்றுக்கொண்டோம். எங்கள் ஒரு அறையைத் தவிர மற்ற அறைகளை சென்னையில் இருந்து வந்த ஒரு கல்லூரியின் மாணவர்கள் பதிந்திருந்தனர். இரவு முழுதும் அவர்களின் ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது, கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தியது. கவலைகளே இல்லாத நாட்கள் என்று அதைக் கூறலாம். ஆகையால் அவர்களின் கூச்சலைப் பொருட்படுத்தாது அவர்களுக்காக சந்தோசப்பட்டோம். கொடைக்கானலில் இது மழைக் காலம். ஆனால் அடித்த குளிர், குளிர் காலத்திற்கு இணையான குளிர். கம்பளியின் கதகதப்பில் அப்படியே தூங்கிப் போனோம்.
காலை ஆறு மணி. கம்பளியை ஊடுறுவிய குளிர் தட்டி எழுப்பத் துயில் கலைந்தோம். அறைக்கு வெளியே பனிக் காற்று.. விடுதிப் பொறுப்பாளர் காபியுடன் காலை வணக்கம் கூறினார். வராந்தாவில் அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். ஒரு மலை!! இறைவனின் இயற்கைப் படைப்பு. அதற்கு எத்தனை சக்தி!! சிலவன அதனால் வாழ்கின்றன. சிலவன அதனால் மகிழ்கின்றன.. உலகத்து உயிர்களைத் தன்னகத்தே ஈர்க்கும் ஈர்ப்பு எத்தகையது. விளக்கைக் கண்ட பூச்சிகளைப் போல் மாந்தர்கள் இம்மலையால் ஈர்க்கப்படுகிறார்கள். அது தான் இறைவனின் படைப்புத் திறமை. இயற்கையின் சக்தி…

கிளம்பித் தயாரானோம். கொடைக்கானல் மலையின் உண்மையான அழகை ரசிக்க நகரத்திற்கு அப்பால் வட்டக்கானல் என்ற இடம் நோக்கிச் சென்றோம். கொடைக்கானலில் இருந்து ஆறு கிமீயில் இருக்கிறது அந்த இடம்.


‘குட்டி இஸ்ரேல்’ என்று அழைக்கப்படும் வட்டக்கானல் இஸ்ரேலியர்களின் விருப்பமான இடம். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இங்கு வரும் இஸ்ரேலியர்கள் மாதக்கணக்கில் தங்கியிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். பாம்பார்புரம் சென்று அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் சென்றால் வட்டக்கானல் செல்லலாம். மிகக் குறுகிய சாலை அடர்ந்த பைன் மற்றும் தைலமரக் காடுகளுக்குள் ஊடுருவிச் சென்றது. இருபுறமும் எதிரெதிரே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று கைகோர்த்து கதிரொளி உட்புகாத வண்ணம் பசுமைக் கூடாரம் அமைக்கின்றன. எதிர் வரும் குளிர்காற்று காதுமடல்களைத் தீண்டிக் குறுகுறுப்பூட்டியது.


வழியில் காவல்துறையின் சோதனைச் சாவடி வருகிறது. இங்கே சோதனைச் சாவடி அமைக்கக் காரணம் வட்டக்கானல் பகுதியில் பிரபலமாகியிருக்கும் போதைக் காளான் கலாச்சாரம். இயற்கையை ரசிக்கப் பலர் இங்கு வரும்போது சிலரோ போதையை அனுபவிக்க வட்டக்கானலில் குவிகின்றனர். சோதனைச் சாவடியைக் கடந்து செல்கிறோம். 


பயணம் தொடரும்.... பருவமழைப் பயணம்-வட்டக்கானல் நிறைவு இங்கே

5 comments:

  1. பயணம் என்றாலே இன்பம். தங்கள் தகவல்களை படிக்கும் போது நிச்சயம் ஒரு புத்துணர்ச்சி உணர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. கொடைக்கானல் சென்றிருந்தாலும் வட்டக்கானல் சென்றதில்லை. சிறப்பாகச் சொல்லிச் செல்லும் உங்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு வந்தமைக்கு நன்றி.. வட்டக்கானல் ஒரு முறை சென்று வாருங்கள்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete