Saturday 22 April 2017

மேகமலைப் பயணம் - பாகம் 1 (திட்டமிடல்)


மேகமலை!!! பெயருக்கேற்ப அது மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு அழகிய மலைப் பிரதேசம்!! தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மேகமலை இறைவனின் படைப்புத் திறமைக்கு ஒரு சான்று. மலைகளின் ராணி என்று ஊட்டியையும் இளவரசி என்று கொடைக்கானலையும் சொல்பவர்கள் மேகமலையைப் பார்த்தால் தங்கள் கூற்றை மறுபரிசீலனை செய்ய நேரிடும். ஊட்டி, கொடைக்கானல் உடன் ஒப்பிடும் அளவுக்கு மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘ஒன்றுமே இல்லை’ என்பது தான். ஆம், ஊட்டி, கொடைக்கானல் போல் பூங்காவோ, படகு சவாரியோ, கடைத் தெருக்களோ எதுவும் மேகமலையில் இல்லை. அதுதான் மேகமலை. மேகமலையில் இருப்பதெல்லாம் இயற்கை… இயற்கை… இயற்கை… அமைதியான ஏரி, அடுக்கடுக்கானப் பசுந்தேயிலைத் தோட்டங்கள், அதற்கு வேலி போல் அமைந்த நீண்ட மரங்களை உடைய காடுகள், முடிவில் பசுமையான பள்ளத்தாக்குகள் இது தான் மேகமலையின் அடையாளம் உலகத்து அழகை தன்னகத்தே கொண்டுள்ள மேகமலை ஒரு கடவுளின் தேசம்!!!! 


மதுரை மண்ணில் பிறந்து, கடந்த மூன்று வருடங்களாகத் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணி புரிந்தாலும் சமீபத்தில் தான் மேகமலை பற்றி அறிந்தேன். முதலில் மேகமலை பற்றிய அறிமுகம் எனக்கு திகிலாகவே இருந்தது. “அங்க ஒன்னுமே இல்ல… வெறும் காடு…. மோசமான ரோடு…. ரோடே இல்ல…. ஒரு நாள் கூட தங்க முடியாது… வனவிலங்குகள் தொந்தரவு…” இப்படிப் பல விமர்சனங்கள். அனால் நான் எதிர்பார்ப்பது அந்தத் திரில் தானே. மேகமலையைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்குள் சபதமே செய்து விட்டேன். வலைதளத்தில் மேகமலை பற்றிய பகிர்வுகள் என் ஆவலை மேலும் அதிகரித்தன. ஒற்றைக்கால் கொக்காக மேகமலை செல்லச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மூணாறு, சிறுமலை, கொடைக்கானல், இடுக்கி, ராமக்கல்மேடு, வால்பாறை என்று பயணங்கள் சென்று வந்த போதிலும் மேகமலைப் பயணம் மட்டும் எனக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இத்தனைக்கும் நான் பணிபுரியும் இடத்தில் இருந்து மேகமலை வெறும் 60 கிமீ தான். கனவுகளில் மட்டும் மேகமலை வந்து சென்றது.
ஆனால் என் காத்திருப்பு வீணாகவில்லை. தேவதானப்பட்டியைச் சேர்ந்த என் நண்பர் கண்ணன் அவர்கள் சுகர் மருந்துகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் ரீஜனல் மேனேஜராகப் பணிபுரிபவர். பணி நிமித்தமாகத் தமிழகம் முழுதும் பயணம் செய்பவர். திருமணமான முதல் நாளே இயற்கையை நோக்கியத் தன் பயணங்களுக்குத் தன் மனைவியிடம் வாழ்நாள் ஒப்புதல் பெற்றவர். வருமுன் காப்பது என்பது இதுதானோ???!!!
கண்ணன்
கண்ணன் அவர்களுடனான ஒரு யதார்த்தமான சந்திப்பில் பயணத்திற்கான விதை விழுந்தது. ஒரு இயற்கைப் பயணம் செல்லவேண்டும் என்ற தன் ஆவலைக் கூறி அதற்காகத் திட்டமிடக் கேட்டுக் கொண்டார். அடுத்த பயணத்திற்கு அழைப்பதாகக் கண்ணனிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றபோதும் எங்கே செல்வது, எப்போது செல்வது என்ற உறுதி இல்லாமலேயே இருந்தேன். ஒரிரு தினங்களுக்குப் பின் கண்ணன் விதைத்த விதை என் மனதில் துளிர்க்க ஆரம்பித்தது. இம்முறை மேகமலை செல்லும் ஆசையை நிறைவேற்ற விரும்பினேன். கண்ணனுக்கு ஏற்கனவே மேகமலையின் மறுபுறம் உள்ள வெள்ளிமலைக்குக் காட்டுப்பயணம் செய்த அனுபவம் இருந்ததால் தன் சம்மதத்தை உடனே தெரிவித்தார். 

அடுத்து யார் யாரை இந்தப் பயணத்திற்கு அழைக்கலாம் என்று எண்ணியபோது என் மனதிற்குத் தோன்றியவர்கள் பழனியப்பன், மனோபாலா ஆகிய என் நண்பர்கள்.பெரியகுளத்தைச் சேர்ந்த பழனியப்பன் அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டிங் பிரிவில் தமிழகம் முழுதும் சென்று பணிபுரிபவர். நான் செல்லும் பயணப் புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் அறிந்துகொண்டு அடுத்த பயணத்திற்கு அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருந்தார். அவரிடம் திட்டத்தைப் பற்றிச் சொன்னவுடனே குதூகலம் ஆகிவிட்டார்.
பழனி
அடுத்து என் நண்பர் மனோபாலா. என் ஊர் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். சிறு வயது முதல் என்னுடன் எப்போதும் இருப்பவர். என் அனைத்து சுக துக்கங்களிலும் இவரின் பங்கு உண்டு. தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். பயணம் என்றால் போதும் தலை போகிற வேலையாக இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டு இவர் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்.

மனோ
ஆக, நாங்கள் நால்வர் சேர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்தோம். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல. இந்த மேகமலைப் பயணத்திற்க்காக என் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. மேகமலை செல்கிறோம் என்று முடிவானவுடனே நான் செய்த முதல் காரியம் பயணத் திட்டமிட வாட்ஸ்அப்பில் ‘மேகமலைக் கனவுகள்’ என்று ஒரு குழு தொடங்கி இவர்கள் மூவரையும் அதில் இணைத்தது தான். அது எங்கள் திட்டதிற்கு பெரிதும் உதவியதோடு ஒருவருக்கொருவர் அறிமுகமாக நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதனால் பயண நாளன்று எல்லோரும் இயல்பாகப் பழக முடிந்தது. குரூப் தொடங்கிய அன்று முதல் மேகமலைக் கனவுகளில் திழைத்தேன்.
முதலாவதாக எவ்வாறு பயணம் செய்வது என்று விவாதித்தோம். பயணம் என்றாலே எனக்குப் பிடித்தது பைக்கில் செல்வது தான். சிறுமலை, மூணாறு, கொடைக்கானலுக்கு ஏற்கனவே பைக்கில் சென்ற அனுபவம் இருந்ததால் மேகமலைக்கும் பைக்கில் செல்வது என்று முடிவு செய்தோம். தடுப்புச்சுவர்களற்ற மேகமலையின் மோசமான சாலை மனதில் சிறு பயத்தை ஏற்படுத்தினாலும் அந்தத் திரில்லுக்காகவே பைக்கைத் தேர்ந்தெடுத்தோம். மேகமலை செல்லும் சாலையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு அனைவரும் தனித் தனி பைக்கில் செல்வது என்று தீர்மானித்தோம்.
விடுமுறை எடுப்பதில் அனைவருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் ஓர் இரவு மட்டும் தங்குவது என்று தீர்மானித்து ஒரு நல்ல நாளையும் குறித்தாகி விட்டது. அடுத்து தங்கும் அறை.
மேகமலையில் நான்கே நான்கு இடங்கள் மட்டுமே பயணியர் தங்க உள்ளது. 
1. ஹைவேவிஸ் அணைக்கரையில் உள்ள inspection bangalow.
2. ஹைவேவிஸ் ஏரிக்கரையில் அமைந்துள்ள panchayat guest house
3. Sand river cottage
4.cloud mountain bangalow     
முதல் இரண்டும் அரசுக்குச் சொந்தமானது. ஹைவேவிஸ் பேரூராட்சியிலேயே உள்ளது. வாடகையும் குறைவு. மற்ற இரண்டும் தனியார்த் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமானது. சொகுசு பங்களாக்கள். அங்கே ஒரு நாள் தங்கச் சில பல ஆயிரங்களை நீங்கள் செலவு செய்ய நேரிடும். அதுமட்டுமல்லாது இந்த விடுதிகள் தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் இருப்பதால் இவைகளை அடைய நீங்கள் ஹைவேவிஸ் தாண்டி மேலும் 10 கிமீக்களுக்கும் மேல் பயணிக்க வேண்டும்.        
நான் தங்கும் அறை முன்பதிவு செய்ய ஹைவேவிஸ் பாஞ்சாயத் அலுவலகம் அருகில் உணவகம் நடத்தி வரும் திரு.முருகன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு முருகன் என்பவரின் செல் நம்பரைக் கொடுத்தார். அந்த முருகனைத் தொடர்புகொண்டு அறை முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்ய நமது பெயர், முகவரி, தொடர்பு எண், எத்தனை அறைகள் அடங்கிய விவரங்களை SMS செய்தால் போதும். நேரில் சென்று வாடகையைச் செலுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்துவிட்டு மேகமலை செல்லும் நாளுக்காகக் காத்திருந்தோம்.
அந்த நாளும் வந்தது…

முதல் நாள் இரவு ஒவ்வொருவராகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவை உறுதி செய்தேன். கண்ணன் தயாராக இருந்தார். பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த மனோவின் மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று, அவரிடம் சொல்லாமல் ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ஒரு வழியாக அவர் மனைவியிடம் விஷயத்தை எடுத்துக்கூறிச் சம்மதம் வங்கியாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் தனக்குப் போன் செய்து எழுப்பிவிடும்படிக் கேட்டுக்கொண்டார் மனோ.  அடுத்து பழனி, பணி விஷயமாக சென்னை சென்றவர் அப்போதுதான் ஊருக்குத் திரும்புகிறார். அதிகாலை ஊரை அடைந்து விடுவதாகவும் குறித்த நேரத்தில் ஆஜராகி விடுவதாகவும் உறுதியளித்தார். எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ‘பயணக்களைப்பில் வந்து அப்படியே தூங்கிவிடுவாரோ?’ என்று. மறுநாள் காலை எட்டு மனிக்கு அனைவரும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சந்திப்பதாகத் திட்டம். பயணத்திற்குத் தேவையானவைகளை பேக் செய்துவிட்டு, முறையே அதிகாலை 5:20, 5:25, 5:30 மணிக்கென்று மூன்று அலாரங்களை வைத்துவிட்டு (என் மேல அவ்வளவு நம்பிக்கை) தூங்கச் சென்றேன்...

பயணம் தொடரும்......       மேகமலைப் பயணம் - பாகம் 2 இங்கே



1 comment: