Friday 9 June 2017

கள்ளும்...கப்பையும்...மீன் குழம்பும்...

சமீபத்தில் வாகமன் சென்றிருந்த போது ‘குளுக்கிய சர்பத்’ அருந்திய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். இது அதே வாகமன் பயணத்தில் மற்றொரு சுவையான அனுபவம்.


வாகமன் பயணத்தை முடித்துவிட்டுச் ‘செங்கரா’ வழியாகக் குமுளி திரும்பிக் கொண்டிருந்தோம். சாலையின் இருமருங்கும் பசுமை சூழ்ந்திருக்க அதை ரசித்துக் கொண்டு பயணித்தோம். ‘ஃபாத்திமுக்கு’ என்ற இடத்தைக் கடக்கும்போது அந்தப் பசுமைக்குள் இருந்து ஒரு சிறிய கட்டிடம் எட்டிப் பார்க்கிறது. வெள்ளைப் பலகையும் அதில் உள்ள கருப்பு எழுத்துக்களும் நம் கண்களை மின்னச் செய்ய, அதைப் பார்த்ததும் சடன் பிரேக் அடித்து நிற்கிறோம். 


பின்னணியில் "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்.... இந்தப் பார்வை பார்க்கப் பகலிரவா பூத்திருந்தேன்....", என்ற பாடல் வரிகள் நமக்குக் கேட்கிறது. ஆம், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரளப் புகழ் கள்ளுக் கடை இது தான். நம்மூரில் தலைகீழாய் நின்றாலும் கிடைக்காத ஒன்று.. விட்டுவிடுவோமா? கடைக்குப் படையெடுத்தோம்.

முதலில் நம் மனதைக் கவர்ந்தது அந்தக் கடை அமைந்த இடம். சுற்றிலும் மிளகுக் கொடி படர்ந்த பலா மரங்களும், ஊடே வாழை மரங்களும் சூழ்ந்திருக்க கீழே ஆறு ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது. தோட்டத்தின் நடுவே இந்தக் கடை மட்டுமே..




கடையின் உள்ளே சென்றோம். மிகச் சிறிய கடை இரண்டே இரண்டு பெஞ்ச் போடும் அளவுக்கு இருந்தது. இரண்டையும் நாம் ஆக்கிரமித்தோம். உள்ளே இரண்டு பெரிய அண்டாக்களில் பால் போன்று வெள்ளை நிறத்தில் கள் நிரம்பியிருந்தது. நமக்கு இருந்த ஆவலில் அண்டாவைத் தூக்கி அப்படியே குடித்துவிடத் தோன்றியது. 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தில் கள் உண்பது தவறு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி வெள்ளை வெளேர் என்று வெள்ளந்தியாக இருக்கும் கள்ளை நம்மால் புறக்கணிக்க முடியவில்லை. வள்ளுவரிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு கடைக்காரரிடம் கள் வேண்டும் என்றோம். 'தென்னையா? இல்லை பனையா?' என்றார். 'கேரளாவில் பனை மரம் எங்கே இருக்கிறது?' என்று நினைத்துக் கொண்டு, எதற்கு வம்பென்று தென்னங்கள் கேட்டோம். தொட்டுக் கொள்ள வேக வைத்த கப்பைக் கிழங்கும், மீன் குழம்பும் சொல்லிவிட்டு ஆவலாய் காத்திருந்தோம்.




ஒரு லிட்டர் அளவுடைய இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் கள் வந்தது, பின்னாடியே கப்பையும் மீன் குழம்பும்.. ஆளுக்கு ஒரு கண்ணாடிக் கோப்பையில் கள்ளை ஊற்றிக் கொண்டு பயபக்தியுடன் அதை எடுத்து ஒரு வாய் பருகிப் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது, அமிர்தம் என்றால் அது இது தான். நாவின் நுணி இனிப்பை உணர, நாவின் பக்கவாட்டில் உள்ள சுவை நரம்புகள் கள்ளின் புளிப்பைப் பெற்று மூளைக்கு செலுத்துகிறது. புளிப்பும் இனிப்பும் கலந்த அந்தக் கள்ளின் சுவைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் மயங்கினோம். 


சிறகடிப்போம்

அந்தச் சுவையின் மயக்கத்தில் அப்படியே கப்பைக் கிழங்கை ஒரு விள்ளல் எடுத்து மீன் குழம்பில் தொட்டு, கொஞ்சம் மீனோடு வாய்க்குக் கொடுத்த போது ஏற்கனவே கள்ளின் சுவையில் மெய் மறந்திருந்த நாம் இப்போது மீன் குழம்பின் சுவையில் திக்குமுக்காடி விடுகிறோம். சூரியா ஜோதிகா போல் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் கள்ளும் மீன் குழம்பில் நனைந்த கப்பையும்...



தென்னை மரத்தில் தேங்காய் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு உயரத்தில் ஏறி தென்னம்பாளை பூப்பதற்குள்  அதன் முனையை சீவி விட்டால் அதில் இருந்து அமிர்தம் போன்ற ஒரு திரவம் வரும். அதைப் பருகி இன்புறலாம் என்று கண்டுபிடித்து நமக்குச் சொன்ன நம் முன்னோர்களை என்னவென்று பாராட்டுவது!!

மீன்குழம்பின் காரம் நாவைத் தூண்ட கை தானாகக் கள் இருக்கும் கோப்பையை நாடுகிறது. இவ்வாறு ஒரு ஐந்தாறு கோப்பைகள் தீர்ந்ததும் நமது வயிறோடு மனதும் நிறைந்தது. நினைத்துப் பாருங்கள் பகலெல்லாம் பாடுபட்டு, அந்தி சாய்ந்ததும் இது போன்ற ஒரு இயற்கை நிறைந்த இடத்தில் கையில் ஒரு கோப்பை கள்ளும்   தொட்டுக் கொள்ள கப்பையும் மீன் குழம்பும் இருக்க, கவலை மறந்து வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில் ஜேசுதாஸ் "கடலினக்கர போனோரே... காணா பொன்னினு போனோரே..."  என்று பாடிக்கொண்டிருப்பார். மண்ணுலகில் இதை விட சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்...

8 comments:

  1. Ha ha I never forgot that sweet moments

    ReplyDelete
  2. Ha ha I never forgot that sweet moments

    ReplyDelete
  3. அடேங்கப்பா...! என்னவொரு பயபக்தி...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... ஆமாங்க... முதல் முறை தளத்திற்கு வந்த உங்களை உளமாற வரவேற்கிறேன்...

      Delete
  4. Padichadhe kallu kudicha mari irukku

    ReplyDelete