Saturday 17 June 2017

வாகமன் பயணம் - பாகம் 1


வாழ்வில் பல இடங்களுக்குப் பயணம் செய்திருப்போம். ஒரு இடம் சென்று வந்த பின் அடுத்த பயணத்திற்கு வேறு இடம் தேடியிருப்போம். ஆனால் ஒரு சில இடங்கள் மட்டும் சென்று வந்த பின்பும் மீண்டும் நம்மை அழைக்கும். எத்தனை முறை சென்றாலும் தித்திக்கும். அப்படி ஒரு இடம் தான் வாகமன். ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் வாகமன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புது வீடு கட்டும் ஒவ்வொருவரும் விரும்பும் ஒரு விஷயம் வீட்டின் முன் ஒரு சிறிய புல்வெளி அமைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். புல்வெளி வீட்டிற்கு அழகையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கக் கூடியது. புல்லின் பசுமை மனதை இளக்க,  மாலை வேளையில் புல்வெளியில் படுத்துக் கொண்டு நம்மை மறந்து வானையே பார்த்துக் கொண்டிருக்கும் போது புல்லின் குளிர்ச்சியும், புல் நுணி குத்தி ஏற்படுத்தும் குறுகுறுப்பும் ஒரு பேரானுபவம்.. 

ஒரு சிறு புல்வெளிக்கு ஆசைப்படும் நம் கண் முன் ஒரு ஊரே புல்வெளியாகத் தெரிந்தால் எப்படி இருக்கும்? வாழ்வின் மீதி நாட்களை அங்கேயே உலாவிக் கழித்துவிட எண்ண மாட்டோமா? வாகமனின் சிறப்பு அது தான். எங்கெங்கு காணினும் பச்சைப் புல்வெளி மட்டுமே!!!

இரண்டு வருடங்களுக்கு முன் நாமும் நண்பர் மனோவும் குடும்பத்துடன் வாகமன் சென்று வந்த நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாய் படிந்திருக்கிறது. மீண்டும் அங்கே செல்லப் பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்து இப்போது வாய்த்தது. நம்முடன் இம்முறை மனோ, கண்ணன் மற்றும் கண்ணனின் அலுவலக நண்பர்கள் வினோத்தும் பிரபுவும் சேர்ந்துகொண்டனர். மொத்தம் மூன்று நாள் பயணம் வழக்கம்போல் பைக்கில் செல்வது என்று ஒருமனதானோம். மனோ உசிலையில் இருந்து கிளம்பி தேனி செல்ல நானும் கண்ணனும் பெரியகுளத்தில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காலை 10 மணிக்கு மனோவை சந்தித்தோம். பிரபுவும் வினோத்தும் மதுரையில் இருந்து 11 மணிக்கு தேனியை அடைந்ததும் அங்கிருந்து நமது வாகமன் பயணம் ஆரம்பமானது.

தேனியில் 
தேனியில் இருந்து வாகமன் செல்ல நாம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வழியாகக் குமுளியை அடைந்து அங்கிருந்து வண்டிப்பெரியார் வழியாக பீர்மேடு, எலப்பாரா வழியாக 117 கிமீ பயணித்து வாகமனை அடையலாம். ஒருவர் பின் ஒருவராக சீராக பைக்கைச் செலுத்திக்கொண்டு இருக்கும்போது பின்னால் வந்த கண்ணனைக் காணாது பைக்கை வீரபாண்டி அருகே முல்லைபெரியாற்று பலத்தில் நிறுத்திவிட்டு கண்ணனுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் முல்லைபெரியாற்றின் அழகை ரசித்தோம். அது வெறும் ஆறு அல்ல, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வின் ஓர் அங்கம்.

முல்லை பெரியாறு, இடம் : வீரபாண்டி

தனது பையை தேனியிலேயே மறந்து விட்டு வந்ததால் அதை திரும்பிப் போய் எடுத்து வரத் தாமதம் என்று கண்ணன் தெரிவித்தார். பயணம் தொடர்கிறது.

அந்தக் கோடையிலும் தேனி மாவட்டம் பசுமை கட்டி நிற்கிறது. சாலையின் இருமருங்கிலும் முல்லைப் பெரியாற்றைக் குடித்து செழிப்பாக வளர்ந்த தென்னந்தோப்புகள் அரண் அமைக்கின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்கள், அதில் மறுதாம்பாய் தானாய் முளைத்த நெற்பயிர், விதைப்புக்காக நாற்று விடப்பட்ட வயல்கள், வாழைத் தோட்டங்கள், பசுமைக் கூடாரம் போன்ற திராட்சைக் கொடிகள், ஆதில் கனத்துத் தொங்கும் திராட்சைக் கொத்துக்கள்… ரசித்துக் கொண்டே பைக்கைச் செலுத்தினோம். 

தேனி-குமுளி சாலை

கம்பத்தைத் தாண்டி 14 கிமீ சென்றதும் லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ‘கர்னல் ஜான் பென்னிகுயிக்’ அவர்களின் நினைவு மண்டபம் வருகிறது. அவர் ‘காலத்தை வென்றவர்.... காவியமானவர்.....’. மானசீகமாக அவரை வணங்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

பென்னிகுயிக் மணிமண்டபம்

மலைச்சாலையில் செல்லும்போது இந்த ராட்சஷக் குழாய்களைக் கடக்கிறோம். முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் இந்தக் குழாய்கள் மூலம் மேலிருந்து கீழே லோயர் கேம்பில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


அடுத்து இரைச்சல் பாலம் என்ற இடம் வருகிறது. முல்லைபெரியாறு தமிழகம் நோக்கி பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வரும் குழந்தை போல் துள்ளிக் குதித்து வருகிறது. அந்தத் துள்ளலில் நீர்த்துளிகள் பன்னீர் போல் நம் மீது தெறித்து குளிர்ச்சியைத் தருகிறது.

இரைச்சல் பாலம்
அதற்குள் அனைவருக்கும் பசி எடுக்க கண்ணன் அவர்கள்  நமக்காக வீட்டில் இருந்து தயார் செய்து கொண்டு வந்த புளி மற்றும் எழுமிச்சை சாதத்தை அங்கேயே உண்டு பசியாறினோம். பசியில் ருசி இரட்டிப்பானது.



6 கிமீ மலைச்சாலையைக் கடந்து குமுளியை அடைகிறோம். குமுளி ஒரு வாசனை நகரம். மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விளையும் வாசனை பூமி அது. வளைந்து நெலிந்து செல்லும் சாலையின் இருபுறமும் பலா, ஏலக்காய், காபி, தேயிலை மற்றும் மிளகுக் கொடிகளின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே பயணித்து வாகமனை அடைந்தோம். காட்சிகள் மாறியதே தவிர பசுமை மாறவில்லை.




நாம் எலப்பாரா வழியாக வாகமன் செல்லாமல், 10 கிமீ தூரம் குறைவான செங்கரா வழியில் சென்றோம். வாகமனின் முதல் காட்சியே நம்மை மயக்கப் போதுமானதாக இருந்தது.  தூரத்தில் தெரிந்த பசும்புல் அப்பிய மலை வாகமனின் குளிரைத் தாங்காது மலை தனக்குப் போர்த்திக்கொண்ட பிரம்மாண்டக் கம்பளி போல் காட்சிப்படுகிறது.




வாகமன் ஒரு சிறிய நகரம். ஊரின் நுழைவாயிலை இருபுறமும் புல்வெளிகள் அழகுபடுத்துகின்றன. ஊரைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள். தேயிலைத் தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய ஏரி. படகு சவாரி செய்யலாம். மாலை நான்கு மணிக்கே பனி இறங்கிவிடுகிறது. விளக்கொளியுடன் பைக்கை செலுத்தி நகருக்குள் சென்று ஒரு தங்கும் விடுதியில் எங்களுக்கான அறையைப் பதிந்துகொண்டு இளைப்பாறினோம். தங்கும் விடுதிக்கு வாகமனில் பஞ்சமில்லை. எட்டுக்கு ஒரு விடுதி உள்ளது. மாலை எந்தத் திட்டமும் இல்லை. பொதுவாக நமது பயணம் திட்டமிடப்பட்ட சுற்றுலாவாக இருக்காது. பல இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற மனப்பான்மையும் இல்லை. பார்க்கும் இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இன்பம் இரட்டிப்பாகும் என்ற எண்ணமும் இல்லை. அத்தகைய எண்ணம் ஒரு மாயை. நம்முடைய பயணம் எப்போதும் பயணிக்கும் இடத்துடன் ஒன்றி சூழ்நிலைக்கேற்ற வாழ்வை வாழ்ந்து விட்டு வருவதாகவே இருக்கும். வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறுபாட்ட வாழ்வை வாழும் ஒரு வாய்ப்பு அவ்வளவே. அது மனதிற்கு அமைதியையும் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்தால் போதும்…  

கடைத்தெரு வரை காலாற நடந்து சென்று குளிரை அனுபவித்துத் திரும்பினோம். விடுதிக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த மலைக் குன்றுகளைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இருட்டத் தொடங்கியது. விடுதியின் உரிமையாளர்  கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். வானத்தில் வெள்ளி முளைக்கவில்லை, மழைக்கான அறிகுறி.. சிறிது நேரத்தில் தூரல் போட்டு கேம்ப் ஃபயரை முடித்து வைத்தது. மீதிக் கச்சேரியைத் திண்ணையில் தொடர்ந்தோம். இரவு உணவாக சப்பாத்தியும் சூடான சிக்கன் கிரேவியும் வந்து, வந்த வேகத்தில் வயிற்றை நிரப்பி மறைந்தது. கேரள உணவின் தீவிர ரசிகன் நான்.. அடுத்து தமிழ் திரைப்படங்களின் லேட்டஸ்ட் குத்துப் பாடல்களுக்கான நடன அரங்கேற்றம் நடைபெற்றது. கண்ணன் நடனத்தில் அனைவரையும் விஞ்சியிருந்தார். உற்சாக மனதுடன் கம்பளிக்குள் தஞ்சமடைந்து தூங்கினோம்.

அதிகாலை… மணி 5:30.. இதமான குளிர்.. கம்பளியின் கதகதப்பு.. விழிப்பு வந்தாலும் எழ மனமின்றி, கதகதப்பை அனுபவித்துப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்துவிட குளிரில் ஒரு நடை சென்றோம். குளிருக்கு இதமாய் ஆளுக்கு ஒரு ‘சாயா’ அடித்தோம். சொம்பு போன்ற பெரிய கண்ணாடிக் கோப்பையில் வழங்கப்பட்ட சாயா, பருக சற்று நேரம் பிடிக்கிறது. நம் ஊர் அளவை விட அதிகம்.


அறையை அடைந்து தயாரானோம். காலை உணவாக ஆப்பமும் முட்டைக் குருமாவும் புதிய சுவையைக் கொடுத்தன. பைக்கை எடுத்துக் கொண்டு எலப்பாரா செல்லும் சாலையில் பயணித்தோம். வலது புறம் ஒரு மிகப்பெரிய கற்பாறை அழகிய ஓவியம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. பூதக் கண்ணாடியில் பார்த்தபோது எறும்பு போல் சாரை சாரையாக மனிதர்கள் அதன் உச்சியில் நடந்து கொண்டிருந்தனர். தங்கல்பாறை அதன் பெயர். இஸுலாமியர்களின் புனிதத் தளம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ‘பீர் முகமது’ என்ற இஸுலாமியத் துறவி அங்கு வந்து தொழுகை செய்த வரலாற்றைக் கொண்டது. நாமும் அங்கே சென்றோம். 

தங்கல்பாறை

பைக்கை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு மலையேறினோம். செங்குத்தாக இல்லாமல் ஏறுவதற்கு எளிதாகவே இருந்தது. உயரே செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது. பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் அங்காங்கே எழுமிச்சம் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அதைக் பிடுங்கி அதில் வரும் சுகந்தமான வாசனையை முகர்ந்து புத்துணர்ச்சி அடைந்தோம்.


மலை உச்சியின் குறுக்கே ஓரிடத்தில் பள்ளமான பகுதி வருகிறது. அந்தப் பகுதியின் இருபுறத்தையும் ஒரு ‘வின்ச்’சால் இணைத்துத் தொழுகைக்குத் தேவையான பொருட்களை அதில் கடத்துகிறார்கள். அந்தப் பள்ளத்தின் மறுபக்கத்தை அடைந்தால் பீர் முகமது அவர்கள் தொழுகை செய்த இடத்தை அடையலாம்.


வின்ச்
அப்போது கண்ணனிடம் அவரின் பைக் சாவி இல்லாதது தெரிந்தது. கண்ணன் நம்மை முன்னேறச் சொல்லிவிட்டு பைக் சாவியை தேடச் சென்றார். அனால் அவரை விட்டுச் செல்வது அவ்வளவு நல்ல செயல் அல்ல என்பதால் நாமும் அவரோடு சாவியைத் தேடினோம். கடைசியில் சாவி அவரின் பைக்கிலேயே விட்டு வந்திருக்கிறார். மலையேற்றம் தந்த களைப்பை ‘குலுக்கிய சர்பத்’ அடித்துத் தணித்தோம். அந்த அனுபவம் இங்கே…

குலுக்கிய சர்பத்

தங்கல்பாறையின் இடதுபுறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ஒரு பசுமையான பள்ளத்தாக்கு உள்ளது. நாங்கள் சென்றபோது யாரும் இல்லை. அங்கிருந்த ஒரு கூடாரத்தில் அமர்ந்து இயற்கையின் துணையை அனுபவித்தோம். வானத்தின் நீலத்தைக் கரைத்துப் பள்ளத்தாக்கு முழுதும் தெளித்ததுபோல், பள்ளத்தாக்கு நீலமாய் தெரிந்தது. பள்ளத்தாக்கில் இருந்து மேல் நோக்கி வரும் காற்று சாமரம் வீசியது. அப்போது பேருந்தில் ஒரு சுற்றுலாக் குழுவினர் அங்கு வர அவர்களுக்கு அந்த இடத்தை விடுத்துக் கிளம்பினோம். 




சூரியன் உச்சிக்கு வந்திருக்க அவரிடம் இருந்து தப்பித்து பைன் மரக்காட்டிற்குள் தஞ்சமடைந்தோம். இது எலப்பாரா செல்லும் சாலையிலேயே உள்ளது. மலைச்சரிவில் ஓங்கு தாங்காய் வளர்ந்த பைன் மரங்கள் அடர்ந்திருக்கும் காடு அது. சூரியக் கதிர்கள் தடை செய்யப்பட்ட பகுதி. மரக்கிளைகள் ஒன்றோடொன்று கைகோர்த்து இயற்கையான குளிர்சாதன வசதியைக் கொடுத்தது. உதிர்ந்த பைன் மர இலைகளின் மேல் நடப்பது மெத்தை மேல் நடப்பது போல் இருந்தது.  மதிய வெயிலுக்கு வாகமனின் முக்கால்வாசி சுற்றுலாப் பயணிகள் அங்கே தான் இருந்தனர். அந்தக் கூட்டம் நமக்கும் இயற்கைக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது போல் தோன்றியது. தனிமையும் அதை நிறப்ப இயற்கையும் ஒரு பேரின்பம். ஒதுக்குப்புறமான இடத்தைத் தேடி சிறிது இளைப்பாறினோம். அறைக்குச் சென்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது கண் அயர்ந்தோம். 

பயணம் தொடரும்... வாகமன் பயணம் நிறைவு இங்கே

5 comments:

  1. பயணக்கட்டுரை மிக அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. மிக்க நன்றி....

    ReplyDelete